ஒபாமா கூறுவதை ஏற்க முடியாது - இலங்கை அரசு
கொழும்பு: இலங்கை நிலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ள கருத்துக்களை இலங்கை அரசு ஏற்கவில்லை என்று இலங்கை லட்சுமண் யாப்ப அபயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதிகளில் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி நிலவுகிறது. இதைத் தீர்க்காவிட்டால் மிகப் பெரிய பேரழிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என இலங்கை அரசுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து அபயவர்த்தனே கூறுகையில், போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாடுகள் நெருக்குதல் கொடுத்து வருகின்றன. ஆனால் இதுதொடர்பான அரசின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை குறித்து விவாதிக்க எந்தவித தேவையும் இல்லை என்று உறுப்பு நாடுகளை நாங்கள் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவும், இங்கிலாந்தும், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயலுகின்றன என்றார் அபயவர்த்தனே.