கார்த்திக் மீது கட்சி வேட்பாளர் பார்வதி போலீஸில் புகார்
மதுரை: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், தன்னிடம் ரூ. 5 லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டதாக கூறியிருந்த அவரது கட்சியின் தேனி வேட்பாளர் பார்வதி, இதுகுறித்து மதுரை காவல்துறை ஆணையரிடம் முறைப்படி புகார் கொடுத்துள்ளார்.
கார்த்திக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர் பார்வதி. லோக்சபா தேர்தலில் விருதுநகர் மற்றும் தேனி தொகுதிகளில் கார்த்திக் கட்சி போட்டியிட்டது.
விருதுநகரில் கார்த்திக்கும், தேனியில் பார்வதியும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தல் நாளுக்கு முதல் நாளில், கார்த்திக் மீது பண மோசடி புகாரைக் கூறினார் பார்வதி.
பிரசாரத்திற்காக ரூ. 5 லட்சம் பணம் வாங்கியதாகவும், ஆனால், பிரசாரத்திற்கும் வரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் கார்த்திக் மீது போலீஸில் புகார் கொடுப்பேன் என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார் பார்வதி.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் தேர்தலில் நிற்பதற்காக ரூ.5 லட்சத்தை கார்த்திக்கிடம் கொடுத்தேன். அந்த பணத்தை எனது தேர்தல் பிரசாரத்துக்கு செலவழிப்பதாக கூறினார். ஆனால், ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. எனக்காக பிரசாரமும் செய்ய வரவில்லை.
மதுரை காளவாசலில் உள்ள ஒரு ஆடிட்டர் வீட்டிற்கு அழைத்து ஒரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கினார். 20 ரூபாய் வெற்று பத்திரத்திலும் கையெழுத்து பெற்றார். இவற்றை திருப்பி கேட்டதற்கு தர மறுத்து விட்டார். அதனால், எனக்கு பயமாக உள்ளது.
நான் மாநில மகளிரணி தலைவியாக கட்சிக்கு உண்மையாக உழைத்தேன். ரியல் எஸ்டேட் தொழிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேர்தலுக்கா செலவிட்டேன்.
எனக்கு கணவர் கிடையாது, 3 குழந்தைகள் மட்டும் உள்ளனர். என்னிடம் கார்த்திக் பறித்த பணத்தையும், அவர் வாங்கி வைத்துள்ள வெற்றுப் பத்திரங்களையும் பறிமுதல் செய்ய காவல்துறையை நாடியுள்ளேன் என்றார் பார்வதி.












Click it and Unblock the Notifications