நாளை வாக்கு எண்ணிக்கை- பலத்த பாதுகாப்பு - 10 மணிக்கு முதல் முடிவு

மக்களவையின் 543 தொகுதிகளுக்கான 5 கட்டமாக தேர்தல் நடந்தது. கடைசி கட்டத் தேர்தல் 13ம் தேதி நடந்தது.
இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எப்படி எண்ணப்படும்...?
ஒரு மக்களவை தொகுதியில் 6 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பேரவை தொகுதிகயின் வாக்குகளை எண்ண 14 மேசைகள் அமைக்கப்படுகின்றன. மேசைக்கு இருவர் வீதம் 28 பேர் வாக்குகளை எண்ணுவார்கள்.
ஒரு மக்களவை தொகுதிக்கு 91 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர். இது முழுக்க வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்காக நாடு முழுவதும் 1080 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை உடனுக்குடன் அறிய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தென்சென்னைக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், மத்திய சென்னைக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரிக்கும், வடசென்னைக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரிக்கும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டு்ளன.
கல்லூரிக்குள் யாரும் செல்ல அனுமதியில்லை. வேட்பாளர்களின் அனுமதி அடையாள அட்டை வைத்துள்ள கட்சியினர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஏஜென்ட்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.
கல்லூரிகளுக்குள் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லக் கூடாது. சாப்பாடு, தண்ணீர் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். கண்ணாடி பொருட்கள், தீ பற்றும் பொருட்கள், தீப்பெட்டி கொண்டு செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
10 மணிக்கு முதல் முடிவு...
மிகச் சிறிய தொகுதியின் முடிவுகள்தான் முதலில் தெரிய வரும். அந்த வகையில் தமிழகத்தில் நாகை தொகுதியில்தான் மிகக் குறைந்த அளவாக, அதாவது 7 போரே போட்டியிட்டுள்ளனர். எனவே நாகை தொகுதியின் முடிவு முதலில் தெரிய வரும்.
அதேபோல குறைந்த அளவிலான வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ள தென்காசி (9), கடலூர் (11), மதுரை (12), சிதம்பரம், தஞ்சை, ஆரணி (தலா 13) ஆகிய தொகுதிகளின் முடிவுகள் பகல் 10 மணிக்குள் தெரியவரும்.
தென்சென்னையில் 43 பேர் போட்டியிட்டுள்ளனர். எனவே இதன் முடிவு தெரிய சற்று கால தாமதமாகும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி முடிவுகள் பிற்பகல் 2 மணிக்குள் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications