தேர்வு முடிவை பார்க்காமல் மாணவி உயிரிழந்த சோகம்
சென்னை: கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிளஸ்டூ மாணவி, தேர்வு முடிவு வருவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு அஸ்வதி, ஹரீஸ் என இரண்டு குழந்தைகள். மூத்த பெண் அஸ்வதி கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்குரிலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அஸ்வதியின் தாயார் சுமதிக்கு முதுகு தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவரால் எழுந்து நட முடியாமல் போய்விட்டது. அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். இதையடுத்து அஸ்வதி வீட்டு வேலை பார்த்துவிட்டு பின்னர் தினமும் பள்ளியில் சென்று படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அப்போது பிளஸ் 2 தேர்வு வேறு நடந்து வந்ததால் அவர் வீட்டில் வேலை செய்துவிட்டு பின்னர் இரவு நீண்ட நேரம் படித்து வந்ததால் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி அவரது கல்லீரலில் வீக்கம் அதிகரித்து மரணமடைந்தார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. மாணவி அஸ்வதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சிபெற்று 870 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதையடுத்து நேற்று பள்ளியில் தேர்வு முடிவுகளை பார்க்க மாணவிகள் இந்த சோக சம்பவத்தை கேட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் துக்கத்துடன் அவர்கள் அஸ்வதிக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.