பாஜகவுக்கு பெரும் சரிவு..அத்வானி விலகுகிறார்
டெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு 18 இடங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் 138 இடங்களில் அந்தக் கட்சி வென்றது. இம்முறை 120 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி கடந்த தேர்தலைவிட 14 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது.
கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதே போல பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் பிகாரில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சிவ சேனா, சிரோமனி அகாலிதளம் ஆகிய கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
தோல்வியை ஒப்புக் கொண்டது பாஜக:
இந் நிலையில் லோக்சபா தேர்தல் தோல்வியை பாஜக அதிர்ச்சியுடன் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முடிவுகள் பாஜக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கூறுகையில், தேர்தல் முன்னணி நிலவரம் பெரும் ஏமாற்றமாக உள்ளது. இப்படி ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்ணனியில் உள்ளதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.
கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்டி எங்கு தவறு நடந்தது என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
அதேபோல மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 3வது அணிக்கு கிடைத்துள்ள முடிவையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.
மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கூறுகையில், காங்கிரஸ் கை ஓங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னேற்றப் பாதையில் செல்கிறது. நாங்கள் பின்தங்கியிருக்கிறோம்.
எங்கு தவறு என்பதை ஆலோசித்துதான் தீர்மானிக்க முடியும். பெரும் ஏமாற்றமாக உள்ளது என்றார்.
மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், தோல்வி அதிர்ச்சி தருகிறது. இது குறித்து ஆலோசிப்போம். அத்வானியை பிரதமராக முன்னிறுத்தியதால் நாங்கள் தோற்கவில்லை.
அதே நேரத்தில் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக முன் நிறுத்தியதால் தான் நாங்கள் தோற்றோமா என்பது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது. தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம் என்றார்.
அத்வானி விலகல்:
இந் நிலையில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அத்வானி தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இது குறித்து அருண் ஜேட்லி கூறுகையில், எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்வு செய்யுமாறு அத்வானி கூறியுள்ளார். அதை பாஜக நிர்வாகிகள் ஏற்கவில்லை. அவரை சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால், அவர் தனது முடிவில் தீவிரமாக உள்ளார் என்றார்.