மண்ணைக் கவ்விய இடதுசாரிகள்!
டெல்லி: மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இடதசாரிகளுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலில் இந்த மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று தேசிய அளவில் 54 இடங்களி்ல் வென்ற இடதுசாரிகளுக்கு இம்முறை இந்த இரு மாநிலங்களிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மொத்தமே இடதுசாரிகளுக்கு 25 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.
கேரளத்தில் அந்தக் கூட்டணிக்கு கடந்த தேர்தலில் 19 இடங்கள் கிடைத்தன. அது இம்முறை 14 இடங்களை இழந்து 5 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
அதே போல கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் வென்ற இடதுசாரிகளுக்கு இம்முறை 16 இடங்களே கிடைத்துள்ளது.
இதன்மூலம் அவர்களது பலம் 25 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் கட்சிகளால் கடந்த முறையைப் போல மத்திய அரசின் மீது எந் நெருக்குதலையும் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்தியில் ஆட்சியமைக்க இவர்களது தயவே காங்கிரசுக்கு தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி வரிசையில் அமருவோம்: சிபிஐ
எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் எப்போதுமே காங்கிரஸுடன் சேர்ந்து இருந்தது கிடையாது. பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை.
இது மக்கள் தீர்ப்பு. இதை ஏற்றுக் கொள்கிறோம். இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம். அதேபோல பாஜகவுக்கும் ஆதரவு தர மாட்டோம். எதிர்க்கட்சி வரிசையி்ல் அமர தயாராக இருக்கிறோம்.
பாஜக ஆட்சியமைக்க முயற்சித்தால் அதை அனுமதிக்க மாட்டோம். தடுத்தே தீருவோம் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications