சிவகங்கை-இழுபறி தீர்ந்து ப.சிதம்பரம் வெற்றி
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பெரும் இழுபறிக்குப் பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியில் ஆரம்பம் முதலே அதிமுகவின் ராஜ கண்ணப்பன்தான் முன்னிலையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின் தங்கியிருந்தார்.
இறுதியில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, ப.சிதம்பரம் 300 வாக்குகள் கூடுதலாக பெற்றதாக கூறப்பட்டது.
இதற்கு ராஜ கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலங்குடி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு ஆலங்குடி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் ப.சிதம்பரம் 3049 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கும் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதலில் 300 வாக்குகள் கூடுதல் என்று கூறி விட்டு இப்போது 3000 வாக்குகள் கூடுதல் என்று கூறுவதால் மிகப் பெரிய மோசடி நடக்கிறது. எனவே மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து மறுபடியும் ஆலங்குடி தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதியில், 3354 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குகள் விவரம்..
ப.சிதம்பரம் - 3,34,348.
ராஜ கண்ணப்பன் - 3,30,994.