கூட்டணி தலைவர்கள் ஆப்சென்ட்-தே.ஜ.கூ கூட்டம் ரத்து
டெல்லி: கூட்டணிக கட்சிகளின் தலைவர்கள் சிலர் வராததால், இன்று நடப்பதாக இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது.
பாஜக தலைவர் அத்வானி வீட்டில் இக்கூட்டம் இன்று மாலை நடப்பதாக இருந்தது. இதற்காக பாஜக தலைவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஆனால் பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் அஜீத் சிங் உள்ளிட்ட சில தலைவர்கள் வர மாட்டார்கள் என பாஜக தலைவர்களுக்கு தகவல் வந்தது. இதனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தை பாஜக தலைமை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டது.
நிதீஷ் குமார், அஜீத் சிங் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக பாஜக தரப்பு பலமாக நம்புகிறது. இவர்கள் தவிர வேறு சில கட்சிகளும் கூட கூட்டணியிலிருந்து விலகக் கூடும் எனவும் அது நம்புகிறது. இதன் காரணமாக பாஜக வட்டாரத்தில் பெரும் கவலை நிலவுகிறது.