கோவையில் இருவருக்கு ஸ்வைன் ப்ளூ?
கோவை: அமெரிக்காவில் இருந்த கோவை வந்த இளைஞர் மற்றும் அவரது தாயார் ஆகியோருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகையே மிரட்டி வருகிறது. மெக்சிகோ, அமெரிக்காவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் கடுமையாக சோதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் எம்பிஏ படித்து வரும் 26 வயதான மாணவர் ஒருவர் தனது உறவினரின் திருமணத்துக்காக கோவை வந்திருந்தார். அவருக்கு காய்ச்சல் தொண்டை வலி போன்ற ஸ்வைன் ப்ளூவுக்கு இருப்பதான அறிகுறிகள் இருந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இவரை தொடர்ந்து 55 வயதான அவரது தாயாருக்கும் ஸ்வைன் ப்ளூ அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோவை மாவட்ட சுகாதார துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமையான பகுதியில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை அரசு கல்லூரி மருத்துவமனை டீன் கூறுகையில்,
அவர்களுக்கு ஸ்வைன் ப்ளூவுக்கான அறிகுறி இருந்ததால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு்ள்ளனர். தற்போது அவர்கள் ரத்த சாம்பிள்கள் பரிசோதனைக்காக டெல்லி அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு தெரிந்த பின்னர் தான் எதையும் உறுதி செய்ய முடியும் என்றார்.