4 தமிழக சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல்
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவாக இருந்த மதிமுகவின் கண்ணப்பன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.
அதேபோல கம்பம் மதிமுக எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனும் ராஜினாமா செய்து விட்டு திமுகவுக்குப் போய் விட்டார்.
இளையாங்குடி திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராஜ கண்ணப்பன் ராஜினாமா செய்து விட்டு அதிமுகவுக்குத் தாவி விட்டார்.
அதேபோல, பர்கூர் அதிமுக எம்.எல்.ஏ. தம்பித்துரை, கரூர் தொகுதி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே இந்த நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது. ஒரு சட்டசபைத் தொகுதி காலியானால் அதற்கு 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
எனவே இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே மங்களூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி. செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராகி விட்டார். ஆனால் அவரது ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. இதனால் அந்தத் தொகுதி காலியாகாமல் உள்ளது. ஒருவேளை செல்வத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டால் அதுவும் காலியாகிஅதற்கும் சேர்த்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள முதல் சட்டசபை இடைத் தேர்தல் என்பதால் திமுக தரப்பு தனது பலத்தை தக்க வைத்துக் கொள்ளவும், லோக்சபா தேர்தலில் கிடைத்த புதிய பலத்தை நிரூபிக்க அதிமுக தரப்பும் மும்முரமாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications