கன்னியாகுமரி-தலைமறைவான கொலையாளி 21 ஆண்டுக்கு பின் கைது
கருங்கல்: கொலை வழக்கில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்த குற்றவாளி 21 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கருங்கல் ஊராட்சியை அடுத்தமானான்விளை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். கூலி தொழிலாளி. இவருக்கும் கப்பியறை பகுதியை சேர்ந்த பிலிப் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கடந்த 1988ம் ஆண்டு தேவதாஸ் தனது நண்பர் மணி என்பவருடன் சேர்ந்து பிலிப்பை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து போலீசார் மணியை கைது செய்தனர். ஆனால், தேவதாஸ் குடும்பத்தினருடன் சேர்ந்து தலைமறைவாகிவிட்டார். அவரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில் தேவதாஸ் கேரளாவில் இருந்து கருங்கல் பகுதிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் விரைந்து சென்று தேவதாசை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.