மனித உரிமை மீறல்: இலங்கையை விசாரிக்க வேண்டும்-ஐரோப்பிய யூனியன்
பிரஸ்ஸல்ஸ்: இலங்கை அரசுப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் பலரும், போரின் பெயரால் பெருமளவில் மனித உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையும், துயரத்தையும் தருவதாக உள்ளது. மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
யாரெல்லாம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறி செயல்பட்டார்களோ அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள், மனிதக் கேடயமாக அப்பாவி மக்களை பயன்படுத்துகிறார்கள் என்று கூறிக் கொண்டு இலங்கை அரசு மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி செய்யவும் முடியாது. அதைக் காரணமாகவும் அது கூறக் கூடாது.
இந்த நெருக்கடியைத் தீர்க்க ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசு செயல்பட வேண்டும். ஐ.நா.வுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
போர்ப் பகுதிக்குள் மனிதாபிமானக் குழுக்கள், செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும், அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications