யாழ் குடாவில் உள்ள புலிகள் சரணடைய 48 மணி நேரம் கெடு
பலாலி: யாழ் குடா பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் இன்னும் 48 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.
பொதுமக்கள் யாரும் விடுதலைப் புலி போராளிகளுக்கு அடைக்கலம் தரக் கூடாது. அப்படித் தருவது தவறானது என்றும் யாழ்ப்பாணத்துக்கான ராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அந்த தளபதி விடுத்துள்ள அறிவிப்பில்,
யாழ் மக்களின் சமாதான வாழ்க்கை நிலையை சீர்குலைக்கத் தயாராக இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்காக உதவி புரிவது தவறு என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
அவர்கள் உங்களின் உறவாக அல்லது நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்காக ராணுவத்திடம் சரண் அடைவதற்கு தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
சரண் அடைபவர்கள் எவ்வித பயம், சந்தேகமின்றி உங்களால் அவர்களைச் சரணடையச் செய்ய முடியாவிட்டால் புலனனாய்வு தகவலின் படி அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்களும் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுவீர்கள்.
பயங்கரவாதச் செயலுக்கு தொடர்புடையவர்களின் புனர்வாழ்வை மனதில் கொண்டு அரசு அறிவித்திருக்கும் இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.