சென்னை தொழிலதிபர் வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை: சென்னையை சேர்ந்த தொழலதிபர் வீட்டில் 450 பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சென்னையில் பாரிமுனை பகுதியில் இரும்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வருபவர் ராஜேந்திரன் (40). இவரது இரும்பு ஏற்றமதி நிறுவனத்துக்கு சொந்தமாக டெல்லியிலும் ஒரு கிளை உள்ளது.
இவரது வீடு வளசரவாக்கம் ஜெயராம் காலனியில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் செங்குன்றத்தில் இருக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர்களை வீட்டை பூட்டு சென்றதை நன்றாக கவனித்த மர்ம கும்பல் ஒன்று வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. பின்னர் வீட்டிலிருந்த 450 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.
இரவு வீட்டுக்கு திரும்பிய ராஜேந்திரன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், லாக்கரில் இருந்த 450 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.