ஜாமீன் கிடைக்காததால் சிறையில் கைதி தற்கொலை
மதுரை: மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பொன்னாண்டி என்பவரின் மகன் முருகன்(28). தாழ்த்தப்ட்ட சாதியை சேர்ந்த ஒருவரை தவறாக சொல்லி திட்டியதற்காக இவரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் கடந்த 16.7.2007 முதல் மதுரை மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தங்கியுள்ள செல்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிறை அதிகாரிகள் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, முருகனின் பிணத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் இருக்கும் முருகனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், அவரது உறவினர்கள் யாரும் தம்மை சந்திக்கவில்லை என்ற வருத்தத்தாலும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணனையில் தெரியவந்துள்ளது.