ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை-மேற்கு நாடுகள் தீவிரம்
நியூயார்க்: இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றங்களுக்கான விசாரணையை நடத்த தேவையான நடவடிக்கைளில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையிலான போரின்போது நடந்த போர்க் குற்றச் சம்பவங்கள் குறித்து சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் சம்மதித்துள்ளது. அடுத்த வாரம் இந்த சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜெனீவாவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த உறுப்பு நாடுகளிடம் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும் போதிய ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை.
மொத்தம் 47 உறுப்பினர்கள் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் உள்ளனர். ஆனால் இதுவரை 17 உறுப்பு நாடுகளின் ஆதரவு மட்டுமே இலங்கை அரசுக்கு எதிராக கிடைத்துள்ளதாம்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகள், அர்ஜென்டினா, போஸ்னியா, கனடா, சிலி, மெக்சிகோ, மொரீஷியஸ், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், உருகுவே ஆகியவை இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
இருப்பினும் கூட்டத்திற்கு இன்னும் நாள் இருப்பதால் விரைவில் போதிய உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையில் ஐரோப்பிய நாடுகள் உள்ளனவாம்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின்போது இலங்கைப் படையினர் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிக்க இந்த 17 நாடுகளும் உறுதியுடன் உள்ளன.
மேலும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீ்ழ் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் எனவும் இவை கோருகின்றனவாம்.
காஸா போரின்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலே போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தியது. ஆனால் இலங்கை விவகாரத்தில் அதுபோல நடத்தப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இருப்பினும் இந்தக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த, நடந்து வரும் மனிதாபிமான உரிமை மீறல்கள் குறித்து வெளியுலகுக்குத் தெரியப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும் என ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.
இந்த அமைப்பின் தலைவராக தற்போது அமெரிக்கா உள்ளது. இது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது. இருப்பினும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தனது கருத்துக்களைப் பதிவு செய்யும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படும் என ஐ.நா. பொதுச் செயலாள்ர பான் கி மூன் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இலங்கையை சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த தற்போது வழி ஏதும் இல்லை. காரணம், இலங்கை அந்த கோர்ட்டில் உறுப்பினராக இல்லை என்பதால். அப்படியே போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இலங்கையை நிறுத்த வேண்டும் என்றால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றித்தான் நிறுத்த முடியும். ஆனால், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா ஆகியவை இலங்கையை வலுவாக ஆதரித்து வருவதாலும், இலங்கைக்கு எதிராக தீர்மானம் வந்தால் இந்த இரு நாடுகளும் வீட்டோவை பயன்படுத்தி அதை ரத்து செய் விடும் என்பதால், அதற்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.