அரக்கோணத்திலிருந்து ஆந்திராவுக்கு உற்பத்தியை மாற்றியது எம்ஆர்எப்!
ஆந்திராவில் மேடக்கில் உள்ள இந்நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலையில் உற்பத்தி தொடரும் என்றும், நிலைமை சரியான பிறகு மீண்டும் அரக்கோணம் யூனிட் செயல்படும் என்றும் எம்ஆர்எப் தெரிவித்துள்ளது.
பணிகள் நடைபெறாததால் ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாது என கடந்த மே 17 முதல் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது அரக்கோணம் எம்ஆர்எப்பில்.
தங்கள் போட்டி தொழிற்சங்கமான "எம்ஆர்எப் அரக்கோணம் தொழிலாளர் நல யூனியனுடன்" சம்பள ஒப்பந்தம் போட்டுவிட்டதால் கடுப்பான ஐக்கிய தொழிலாளர் யூனியனோ, தங்களில் யார் பெரிய யூனியன் என்பதை தேர்தல் வைத்து முடிவு செய்து, அதில் வென்ற யூனியடன் பேச்சு நடத்தி சம்பள ஒப்பந்தம் போட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் டயர்களுக்கு எம்ஆர்எப்பையே நம்பி இருப்பதால், உற்பத்தி தடைபடுவதை விரும்பாத எம்ஆர்எப், பிரச்சினை தொடரும்வரை யாருக்கும் சம்பளமில்லை என்றும், அரக்கோணம் பிரிவின் உற்பத்தியை மேடக்கில் தொடருவோம் என்றும் அறிவித்துள்ளது.