பிரபாகரனுக்கு என்றும் மரணம் இல்லை-வைகோ
சென்னை: மண்ணில் தோன்றிய மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரன் பிரபாகரன். அவருக்கு எப்போதும் மரணம் கிடையாது என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறினார்.
இலங்கையில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களை பாதுகாக்க வேண்டும், உணவின்றி, மருந்தின்றி தவிக்கும் அவர்களுக்கு உதவ வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று எழுச்சிப் பேரணி நடந்தது.
இதில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, இயக்குனர் சீமான் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் தமிழ் உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவர்கள் பிரபாகரனின் உருவம் படம் கொண்ட படங்களை தாங்கி சென்றனர். பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளையும், ராஜபக்சேவின் உருவ பொம்மையையும் கொளுத்தினர்.
மன்றோ சிலையில் துவக்கிய இந்த பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை நடந்தது.
மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரர்...
கூட்டத்தில் வைகோ பேசுகையில், உலகம் கண்ட மாவீரர்களுக்கு எல்லாம் மாவீரர் பிரபாகரன். அவர் தன்னையே மாய்த்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா? இல்லை போராட்டத்தை வேறு தளத்திற்கு மாற்றியுள்ளாரா? என்ற கேள்விகள் தமிழர்கள் உள்ளங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நேரம் இந்த நேரம்.
எந்த புரட்சி இயக்கம் என்றாலும் அவர்களுக்கு உதவ 2 நாடுகள் இருந்தன. ஆயுதங்கள், மருந்துகள் தந்தன.
ஆனால் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், உதவ வேண்டிய ஆறரை கோடி தமிழர்கள் இருக்க கூடிய இந்தியாவே இலங்கைக்கு உதவி செய்யும் நிலையில், நாலா பக்கமும் சூழப்பட்டும் இத்தனை படைகளையும் எதிர்த்து போரிட்ட வீரன் ஒருவன் உண்டென்றால் அது பிரபாகரனை தவிர யாரும் கிடையாது.
தமிழினத்துக்கு ஏற்பட்ட கொடுமை வேறு எந்த இனத்திற்கும் ஏற்படவில்லை. எங்கள் தலைவன் கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி பரப்பப்பட்டது. எங்கள் உள்ளம் வேதனைத் தீயில் வெந்து தணிந்தது.
அவர் உயிரோடு, பத்திரமாக இருக்கிறார் என்று பத்மநாபன் அறிவித்த போது அவர் சுவாசம் அடங்கி விடவில்லை என்று நாங்கள் சொன்னோம். அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற செய்தி எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது. அதே சமயத்தில் பிரபாகரனுக்கு என்றுமே மரணம் இல்லை. அவர் உலகத் தமிழர்கள் நெஞ்சை வழிநடத்துகிறார்.
விரைவில் பழிதீர்ப்பார்கள்...
முடிந்து விட்டது என்று கருதாதே ராஜபக்சே. நாங்கள் மானமுள்ளவர்கள். எங்களை விட வருங்கால சந்ததியினர் வேகமாக உங்களை பழிதீர்ப்பார்கள். எந்த லட்சியத்துக்காக பிரபாகரனின் படை போராடியதோ, தியாகம் செய்தார்களோ அதை வென்றெடுப்பதற்கு நாம் உறுதி எடுத்து கொள்வோம் என்றார் வைகோ.