சவூதி சிறையில் வாடும் கடையநல்லூர் தொழிலாளி
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சவூதி அரேபியாவில் வெளி வேலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரமா பகுதியை சேர்ந்தவர் நயினா முகமது. இவர் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் வேலை பார்த்து வந்தார்.
இந் நிலையில் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக அவரது உறவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.
வேலைக்கு சென்ற இடத்தில் அதன் உரிமையாளர் சரிவர வேலை அளிக்காததாலும் சம்பளம் கொடுக்காததாலும் வெளி இடத்தில் வேறு வேலை பார்த்ததால் நயினா முகமது சவூதி அரேபியா போலீசில் சிக்கி சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் விசா வழங்கிய உரிமையாளர்களிடம் தான் வேலை பார்க்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் சிலர் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதால் ஓய்வு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் வீடுகளை சுத்தம் செய்வது, கார் கழுவுவது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
இவ்வாறு வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் போலீசில் பிடிபட்டு சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவது உண்டு.
சவுதி அரேபியாவில் வெளி வேலை செய்து போலீசில் சிக்கி சிறையில் இருக்கும் நயினா முகமது கடந்த 2 மாதமாக சூரிய ஒளியைக் கூட காண முடியாமல் இருட்டான அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சரிவர உணவு, குடிநீர் இல்லாமல் மிகுந்த சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நண்பர் மூலம் குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் கண்ணீரும், கம்பலையுமாக மிகுந்த வேதனையில் உள்ளனர். இதே போல வேலைக்கு சென்ற பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications