கோவை-பெண் எஸ்ஐயை தாக்கி கொள்ளை!
கோவை: கோவையில பெண் போலீஸ் எஸ்.ஐ., மற்றும் அவரது தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கி, நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு எஸ்.ஐ -யாக பணியாற்றி வருபவர் ஸ்ரீமதி (32). இவரது வீடு, போத்தனூர், செட்டிபாளையம் ரோட்டில், கிருஷ்ணா நகர், கம்பர் வீதியில் உள்ளது.
இவரது கணவர் உதயகலாதரன், கர்நாடக மாநிலம், மைசூரில் டயர் ரீ டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.
அதிகாலை நேரத்தில் எஸ்.ஐ. ஸ்ரீமதி, அவரது மகன்கள் அஜய்குமார்(4), அமல்ராஜ்(2) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மற்றொரு அறையில், ஸ்ரீமதியின் தந்தை சேகரன்(54), தாயார் கமலம்(48) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அதிகாலை 3.00 மணி அளவில் மர்ம மனிதர்கள் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர்.
அப்போது, வீட்டின் பின் பக்க கதவை திறந்து வெளியே நோட்டமிட முயன்ற போது, அவரை தள்ளிவிட்டு மூன்று கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.
சுதாரித்துக் கொண்ட ஸ்ரீமதி, சமையலறையில் இருந்த நாற்காலியை எடுத்து தாக்க முயற்சித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை தாக்கி, அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் நகையை பறித்து விட்டு ஒரு அறையில் தள்ளி பூட்டினர்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த ஸ்ரீமதியின் தந்தை சேகரன், கொள்ளையரை தடுக்க முயன்ற போது, அவரும் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.
சிறி்து நேரத்தில் அங்கிருந்து கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உட்பட்ட தந்தை சேகரனை மீட்ட ஸ்ரீமதி, அவரை சிகிச்சைக்காக கோவையில் ஒரு தனியர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இது குறித்து எஸ்.ஐ ஸ்ரீமதி, செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் புகாரை பதிவு செய்த மறுத்த போலீசார் போத்தனூர் காவல் நிலையம் செல்ல அறிவுரை கூறியுள்ளனர்.
இதனையடுத்து போத்தனூர் காவல் நிலையத்தில் இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தகவல் அறிந்த துணைக் கமிஷனர் காமினி, உதவிக் கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர், கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.