சென்னையில் காய்கறிகள் விலை திடீர் கடும் உயர்வு

சமீப காலம் வரை சென்னையில் காய்கறிகளின் விலை அவ்வளவாக உயரவில்லை. பரவாயில்லை ரகத்தில் இருந்தன. ஆனால் தற்போது திடீரென காய் விலை ஏறி விட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ அவரைக் காய் 28 ரூபாய்க்கு விற்கிறது. காரட் விலை ரூ. 12, புடலங்காய் ரூ. 10, பீன்ஸ் ரூ. 28, பீட்ரூட், சேனைக் கிழங்கு தலா ரூ. 10, கிரை ஒரு கட்டு ரூ. 5 என விற்கிறது.
இருப்பதிலேயே தக்காளியின் விலைதான் ரொம்ப அதிகம். கிலோ தக்காளி ரூ. 30 ஆகியுள்ளது. போன வாரம் அது 10 ரூபாய்க்குக் கிடைத்தது.
இது மொத்த மார்க்கெட் நிலவரம். சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள சில்லரை காய்கறிக் கடைகளில் இதை விட 2 முதல் 20 ரூபாய் விரை ஏற்றி விற்கிறார்கள். இதனால் மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏன் இந்த திடீர் உயர்வு...
வெயில் காலம்தான் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள். காய்கறிகளை ஸ்டாக் வைத்து விற்க முடியாது. அன்றன்று விற்றால்தான் உண்டு. எனவேதான் குறைந்த அளவிலான காய்கறிகளை, குறிப்பாக தக்காளியை வாங்கி விற்க முடிகிறது.
அளவுக்கு அதிகமாக வாங்கி ஸ்டாக் வைத்தால் வெயில் அதிகம் இருப்பதால் அழுகிப் போய் விடும் அல்லது வெம்பிப் போய் விடும் என்கிறார்கள் வியாபாரிகள்.
வெயில் குறைந்தால்தான் இந்த நிலை மாறும். அதுவரை இப்படித்தான் இருக்கும் என்றும் அவர்கள் பீதி காட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications