ராணுவ வாகனம் மீது தாக்குதல்-பெரியார் திக செயலர் மீது குண்டாஸ்
கோவை: கோவையில் ராணுவ வாகனத்தை தடுத்து தாக்கிய வழக்கில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.
கடந்த 2ம் தேதி கோவை வழியாக இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கோவை அருகே பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஒரு கும்பல் ராணுவ வாகனங்களை தாக்கி தீ வைத்தனர்.
இதையடுத்து ராமகிருஷ்ணன் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இந் நிலையில் ராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனிக்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி இராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராமகிருஷ்ணனிடம் கோவை சூலூர் போலீசார் அதற்கான உத்தரவை அளித்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைகு பெரியார் திகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications