சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அஸம்கான் நீக்கம்
லக்னோ: சர்ச்சைக்குரிய சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் முகம்மது அஸம்கான் அக்கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர்களான அமர்சிங்குக்கும், அஸம்கானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.
இருவரும் சரமாரியாக புகார்களைக் கூறி வருகின்றனர். அதிலும், அமர்சிங் கடும் விரக்திக்குள்ளானார்.
ஜெயப்பிரதாவுக்கு சீட் வாங்கும் விவகாரத்தின்போது மோதல் பெரிதாக வெடித்தது. இருப்பினும் சீட் கிடைத்து, இப்போது ஜெயப்பிரதா ஜெயித்தும் விட்டார்.
இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயப்பிரதாவின் ஆபாசப் படங்களையும், போஸ்டர்களையும் அஸம்கான் விநியோகித்ததாக ஜெயப்பிரதா பரபரப்பு புகார்களைக் கூறினார்.
இந்த அடிதடியால் சமாஜ்வாடி கட்சியின் பெயர் பெருமளவில் நாறியது. இது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது. எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மிகக் குறைந்த அளவிலேயே சமாஜவாடிக் கட்சியின் வெற்றி இருந்தது. இவர்களது சண்டையால் காங்கிரஸ் கட்சி பலனடைந்து விட்டது.
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு அஸம்கானின் போக்குதான் காரணம் என கட்சியின் பல்வேறு தரப்பினரும் முலாயம் சிங்கிடம் புகார் கூறி வந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் அஸம்கான் இன்று கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது சமாஜ்வாடிக் கட்சி.












Click it and Unblock the Notifications