தமிழர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் - பான் கி மூன்

கொழும்பு வந்த பான் கி மூன் நேற்று வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ள மானிக் பார்ம் இடம் பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்றார்.
அங்கு தமிழ் மக்களை சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அவர்களுக்காக அரசு செய்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். முகாமில் செய்யப்பட்டுள்ள வசதிகளையும் பார்வையிட்டார்.
தமிழ் மக்களின் நிலையைப் பார்த்து பான் கி மூன் மனதளவில் உணர்ச்சிவசப்பட்டது அவரது முகத்திலேயே தெரிந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பான் கி மூன் பேசுகையில், இந்த மக்கள் மனதளவில் பெரும் காயப்பட்டுள்ளனர். அதை ஆற்ற வேண்டியது அரசின் கடமை. பிரிந்து போன குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். தங்களது வாழ்க்கையை அவர்கள் மீண்டும் தொடங்க வகை செய்ய வேண்டும்.
30 ஆண்டு கால போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப வேண்டியது அவசியம். அகதி மக்கள் மீண்டும் தங்களது இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இங்கிருக்கும் மக்களின் நிலையைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். அவர்களில் பலரும் காயங்களுடன் உள்ளனர்.
போர் பாதித்த பகுதிகளுக்கு ஐ.நா. உதவிக் குழுக்கள் தாராளமாக செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். எந்த வகையில் உதவ வேண்டும் என்றாலும் அதைச் செய்ய ஐ.நா. உதவிக் குழுக்கள் தயாராக உள்ளன.
மனித உரிமைகளுக்கு முழு மரியாதை தரப்பட வேண்டும். போர் முடிந்து விட்டதால் மக்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.
இதற்கு அனைத்துத் தரப்பினரும் கடுமையாக உழைக்க வேண்டும். அரசியல் ரீதியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றார் பான்.












Click it and Unblock the Notifications