10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கைதிகள்
நெல்லை: பத்தாம் வகுப்புத் தேர்வில் பாளையங்கோட்டை சிறைக் கைதிகள் மூன்று பேர் ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில் 10 மத்திய சிறைகள் உள்ளன. சிறை கைதிகள் 10ம் வகுப்பு தேர்வு எழுத சிறைத்துறை டிஜிபி நடராஜன் அனுமதியளித்தார்.
அனைத்து சிறைகளிலும் 10ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பிய 137 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆசிரியர்கள் உதவியுடன் பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுக்கு தயார் செய்யப்பட்டனர்.
பாளை மத்திய சிறை கைதிகள் 32 பேர் உள்பட 137 பேரும் மார்ச் மாதம் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாளை கைதிகள் 32 பேரில், இருவரின் தேர்வு முடிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 பேரில் 22 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை (கைதிகளில்) பாளை மத்திய சிறை கைதிகள் பெற்றனர். மேலநம்பி தோப்பை சேர்ந்த தினகரன் என்பவர் 330 மார்க் எடுத்து முதலிடமும், உடையார்பட்டியை சேர்ந்த பேராட்சி என்பவர் 320 மார்க் எடுத்து 2வது இடமும், முத்துக்குட்டி 313 மார்க் எடுத்து முன்றாவது இடமும் பெற்றனர்.
தினகரன், பேராட்சி இருவரும் ஆயுள் தண்டனை கைதிகளாவர். அனைவரையும் சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி பாராட்டினார்.
ஆடிட்டராக விரும்பும் பியூலா
பத்தாம் வகுப்புத் தேர்வில், மாநிலத்திலேயே 2வது ரேங்க் பெற்ற நெல்லை பாளையங்கோட்டை மாணவி மேரி ஹெப்சிபா பியூலா தனது தந்தையைப் போலவே தானும் ஆடிட்டராக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி மாணவி மேரி ஹெப்சிபா பியூலா. இவர் 500க்கு 495 மார்க் எடுத்து மாநில அளவில் 2ம் இடம் பெற்றார்.
பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் -
தமிழ் 96, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. இவரது தந்தை ஜேம்ஸ் ஏசுபாதம் ஆடிட்டர். தாய் ஹேமாவதி ஆசிரியை.
பியூலா கூறுகையில், கடவுள் கிருபையால் 2ம் இடம் பிடித்தேன். இது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நான் இரவு வெகுநேரம் படிக்க மாட்டேன். அதிகாலையில் எழுந்து படிப்பதே எனது வழக்கம். எனது தந்தையை போல ஆடிட்டராக விரும்புகிறேன் என்றார்.