மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியது வட கொரியா
பியாங்யாங்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறிய வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது. இதை அந்த நாடு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுகுறித்து கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எங்களது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கோரிக்கைக்கேற்ப, வட கொரிய குடியரசு மே 25ம் தேதியன்று அணு ஆயுத சோதனையை நடத்தியது. சுய பாதுகாப்புக்காக இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தப் போவதாக வட கொரியா எச்சரித்திருந்தது.
ஏப்ரல் 5ம் தேதி செயற்கைக் கோளை செலுத்துவதாக கூறி ஒரு ராக்கெட்டை ஏவியது வட கொரியா. ஆனால் இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை என அமெரிக்கா கூறியிருந்தது.
மேலும், வட கொரியா இதேபோன்ற சோதனைகளைத் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில், வட கொரியா தற்போது 2வது அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது.
இந்த சோதனை காரணமாக பல்வேறு நாடுகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
கிம்சாக் என்ற நகருக்கு அருகே நிலத்துக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் கழகம் தெரிவித்துள்ளது.
வட கொரியா முதல் முறையாக 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் அணு ஆயுத சோதனையை நடத்தியது. அதை விட தற்போது செய்யப்பட்ட அணு ஆயுத சோதனை சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.