வீடு புகுந்து பெண்ணை தாக்கிய இன்ஸ்பெக்டர்!
நெல்லை: நெல்லை ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வீட்டுக்குள் புகுந்து தன்னை அடித்து உதைத்தாக மகளுடன் தனியே வசிக்கும் பெண் டிஐஜியிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்த முத்துபாண்டியின் மனைவி பார்வதி நெல்லை சரக டிஐஜியிடம் ஒரு மனு அளித்தார். அதில்,
நான் பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரரின் மனைவி. எனது கணவர் 2வது திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறார். நான் பிளஸ் டூ படிக்கும் மகளுடன் வசித்து வருகிறேன்.
கடந்த 1ம் தேதி வி.கே.புதூர் தங்க நகை தொழிலாளி ஒருவரிடம் பழைய நகைகளை புதுப்பிக்க கொடுத்தேன். அவர் உரிய காலத்தில் புதுப்பித்து தராததால் உறவினருடன் சென்று நகைகளை திருப்பி கேட்டேன். இது குறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் செய்துள்ளார்.
ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 18ம் தேதி என் வீட்டுக்கு வந்த போலீசார் என்னை அடித்து உதைத்து மிரட்டியதோடு வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் மற்றும் சில ஆவணங்களையும் எடுத்து சென்றுவிட்டனர்.
எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிணற்றில் வீசி பெண் குழந்தை கொலை:
சங்கரன்கோவில் வாரசந்தை அருகேயுள்ள நகராட்சி கிணற்றில ஒரு குழந்தை பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பிறந்து சில மாதங்களே ஆன அந்தப் பெண் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
பெண் குழந்தையை பிடிக்காத பெற்றோரே அதை கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.