தமிழக ஆட்சியில் பங்கு-காங். மீண்டும் நெருக்கடி!
தமிழகத்தி்ல் காங்கிரஸ் ஆதரோடு திமுக ஆட்சி நடந்து வருகிறது. மத்தியில் திமுக உதவியோடு காங்கிரஸ் பதவியில் உள்ளது.
மத்தியி்ல் திமுக அமைச்சர்கள் பதவிகளை கேட்டு வாங்கி ஆட்சியில் இடம் பெறும் நிலையில் தமிழகத்தில் காங்கிரசையும் ஆட்சியில் சேர்த்துக் கொண்டு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஜவஹர்லால் நேருவின் 45வது நினைவு தினம் இன்று சத்யமூர்த்தி பவனில் அனுசரிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் தலைமையில் காங்கிரசார் நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம்,
தமிழகத்தில் காங்கிரஸை வலுவான கட்சியாக மாற்ற சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் என்று நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேலிடத்தை வற்புறுத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் மேலிடம் கேட்டால் யோசிப்போம் என்று தெரிவித்தார்.
மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு இது தொடர்பாக முதலமைச்சரும், சோனியாவும் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குபெறுவது குறித்து சோனியா எடுக்கும் முடிவே இறுதியானது.
இலங்கை தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.
காங்கிரஸ் சமூக நீதிக்கு எதிரான கட்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். கடந்த 5 ஆண்டு காலமாக நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ராமதாசின் மகன் அன்புமணி அமைச்சராக பதவி வகித்தபோது, காங்கிரசின் சமூக நீதி பற்றி அவருக்கு தெரியவில்லையா?
இதற்காக நாங்கள் அன்புமணியை குறை கூறமாட்டோம். காங்கிரசை குறை சொல்வதை ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்று சில காலமாக நின்று போயிருந்த கோரிக்கையை சுதர்சனம் மீண்டும் எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இத்தனை இடம், இந்தந்த துறை என்று காங்கிரசை திமுக நெருக்கி வரும் நிலையில் தமிழக காங்கிரசாரின் இந்தக் கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.