குமரியில் விடிய விடிய மழை-நெல்லையில் சாரல்!
மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை விடாது பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே போல் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளும் நேற்று லேசான சாரல் விழுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 10 நாட்களுக்கு முன்பாக மழை துவங்கியுள்ளது. மார்த்தாண்டம், குழித்துறை, மேல்புறம், களியாக்கவிளை, புத்தன்சந்தை, செம்மங்காலை, காப்புகாடு, உண்ணாமலைக்கடை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் இப்பகுதியில் விடிய விடிய மழை பெய்தது. குழித்துறையில் 75 மிமீ, களியலில் 78 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மழைக்கு 4 வீடு சேதம்...
இந்த மழைக்கு பாகோடு பாளையகெட்டியை சேர்ந்த லீலாபாய் என்பவரது வீட்டின் ஒரு பகுதி முழுமையாக இடிந்தது. இதுபோல் குழித்துறை குலவிளையில் ராமமூர்த்தி என்பவரின் வீட்டின் மீது பனைமரம் சரிந்து விழுந்ததில் வீட்டின் மேல்பகுதி சேதம் அடைந்தது. களியலை சேர்ந்த கமலம், மிடலத்தை சேர்ந்த ரத்தினநாயகம் ஆகியோரின் வீடுகளும் கடுமையாக சேதமடைந்தன.
சுபமூகூர்ந்த நாளான நேற்று மழை நிற்காமல் பெய்ததை அடுத்து திருமண நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் குறைவாக தான் இருந்தது. மக்களை நீர் நிறைந்த சாலைகளில் செல்வதை பெரிதும் தவிர்த்தனர். இந்த தொடர் மழை காரணமாக சுமார் 4 மாதத்திற்கு பிறகு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நெல்லையில் சாரல்...
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை லேசான சாரல் விழுந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் விழுந்து வருகிறது. தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
பாபநாசம் அணை பகுதியில் இன்று காலை வரை 16 மீமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 9 மிமீ மழையும், மணிமுத்தாறு அணை பகுதியில் 19 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. குண்டாறு பகுதியில் 6 மிமீ மழையும், நம்பியாறு பகுதியில் 3 மிமீ மழையும் பெய்துள்ளது.
பாபநாசம் அணையில் தண்ணீர் திறப்பு...
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 226 கனஅடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 18 கனஅடி நீரும் வந்து கொண்டு இருக்கிறது. மற்ற அணைகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
இன்று காலை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50.20 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 65.65 அடியாகவும், சேர்வலாறு அணையில் 62.74 அடியாகவும் உள்ளது. விவசாயத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து 412 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 145 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.