இதய கோளாறு-இலங்கை அகதி குழந்தைக்கு உதவுங்கள்
கடலூர்: நெய்வேலி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஒன்றரை வயது குழந்தைக்கு இதய வால்வு பொருத்தவும், இதயத்தில் இருக்கும் இரண்டு ஓட்டைகளை அடைக்கவும் உதவுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெய்வேலி இலங்கை அகதிகள் முகாமில் 7வது வார்டில் வசிப்பவர் ஜெயராமன். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற ஒன்றரை மாத குழந்தை ஒன்று உள்ளது.
இந்த குழந்தைக்கு இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதும், வழக்கமாக இதயத்தில் இருக்கும் நான்கு வால்வுகளுக்கு பதிலாக இந்த குழந்தைக்கு மூன்று வால்வு மட்டுமே இருப்பதும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும் என தெரிவித்த டாக்டர்கள் அதற்கு ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
அந்த ஏழை தம்பதிகள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கருதி மாவட்ட ஆட்சியாளர் ராஜேந்திர ரத்னுவை சந்தித்தனர். தங்களது குழந்தைக்கு முதல்வர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு ஒன்றை அவரிடம் கொடுத்தனர்.
அந்த மனுவை பரிசிலீப்பதாக உறுதி கூறிய மாவட்ட கலெக்டர், குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் நன்கொடையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உடனடியாக உதவுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
உதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
எஸ்.சத்தியா, க/பெ.ஜெயராமன், எண் 22, சிஆர் காலனி, வட்டம் 7, நெய்வேலி, கடலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு உதவலாம். போன்: 97905 32896.












Click it and Unblock the Notifications