மின்சார ரயிலின் சாவி திருட்டு -மீண்டும் பெரும் சதிக்குத் திட்டமா?
சென்னை: சென்னை மின்சார ரயிலின் நான்கு சாவிகள் திருடு போயுள்ளன. இதனால் மீண்டும் பெரும் நாசவேலைக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
சமீபத்தில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட மின்சார ரயிலை படு வேகமாக சரக்கு ரயிலின் மீது மோத விட்ட சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மின்சார ரயில் ஒன்றின் நான்கு சாவிகள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு ரயிலை இயக்கத் தேவையான நான்கு சாவிகளையும் இப்போது அந்தந்த டிரைவர்களிடமே கொடுத்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
சென்னை ஆவடி கோவர்த்தனகிரி பாரத் அவென்யூவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் மின்சார ரெயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 19-ந் தேதி காலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு ஜீவானந்தம் ரயிலில் வந்தார்.
அப்போது அவரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மாஸ்டர் சாவிகளை தன்னுடைய கைப்பையில் போட்டு வைத்திருந்தார்.
ரயில் சென்டிரலை அடைந்ததும் ஜீவானந்தம் இருக்கையில் வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். யாரோ அதை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஜீவானந்தம் புகார் செய்துள்ளார். மேலும் ரயில்வே மேலாளரிடமும் புகார் கொடுத்துள்ளார்.
மாஸ்டர் சாவிகளை பொருத்தவரை, அந்த சாவிகளை எந்த ரெயிலுக்கும் பொருத்தி மின்சார ரெயிலை கிளப்பி செல்ல முடியும். எனவே மாஸ்டர் சாவிகளை யாராவது மீண்டும் சதி வேலை செய்யும் நோக்கத்துடன் திருடி சென்றிருக்கலாமோ? என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
மறதியாக, யாராவது மாஸ்டர் சாவி வைத்திருந்த பையை எடுத்து சென்றார்களா? அல்லது ஞாபக மறதியில் ஜீவானந்தம் ரயில் பெட்டியிலேயே விட்டு விட்டு வந்து விட்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.