அழகிரி டெல்லியிலும் பெயர் எடுப்பார்-தயாளு அம்மாள்

மதுரை வட்டார அளவிலேயே இருந்து வந்த மு.க.அழகிரிக்கு இப்போது ஏறுமுகம். முதலில் கட்சியில் முதன் முறையாக பதவியைப் பெற்றார் அழகிரி. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தென் மண்டல திமுக அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் மதுரை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தன் மீது கட்சித் தலைமை வைத்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் அபார வெற்றி பெற்றார். தமிழகத்திலேயே அதிக அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 2வது வேட்பாளர் அழகிரிதான்.
இந்த நிலையில் தற்போது கேபினட் அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளார் மு.க.அழகிரி.
பதவியேற்புக்காக டெல்லி வந்துள்ளார் மு.க.அழகிரி. அவருடன் அவரது மனைவி காந்தி அழகிரி மற்றும் குழந்தைகளும் வந்துள்ளனர். அழகிரியின் தாயாரும், முதல்வர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாளும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளார்.
தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள தயாளு அம்மாள் மு.க.அழகிரி மீது மிகுந்த நம்பிக்கையுன் உள்ளார்.
அழகிரி அமைச்சராகப் பதவியேற்பது குறித்து தயாளு அம்மாள் கூறுகையில், தனது தந்தை பெருமைப்படும்படியாக அழகிரி நடந்து கொள்வார் என நம்புகிறேன். அவருக்கு நல்லதைச் சொல்லித்தான் வளர்த்துள்ளோம். அவரும் நல்ல பையன்தான். தனது தந்தைக்கு ஏமாற்றம் தர மாட்டார் என நம்புகிறேன்.
டெல்லியிலும், மத்திய அமைச்சராக நல்ல பெயரை சம்பாதிப்பார் அழகிரி என்று நம்புகிறேன் என்றார் தயாளு அம்மாள்.












Click it and Unblock the Notifications