குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய 9ம் வகுப்பு மாணவி
ஆத்தூர்: சேலம் அருகே போலீசாரின் துணையுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை 9ம் வகுப்பு மாணவி தைரியமாக தடுத்து நிறுத்தினார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அறகளூரை சேர்ந்தவர் கதிரவன், சியமளா ஆகியோரின் மகள் புவனேஸ்வரி (14). இவர் அருகிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
கட்டிட வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த கதிரவன் ஏழ்மை நிலை காரணமாக தனது மகள் புவனேஸ்வரியின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவருக்கு ராசிபுரத்தை சேர்ந்த பாஸ்கர் (35) என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்தார்.
இவர்கள் இருவருக்கும் இன்று திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் புவனேஸ்வரி நேற்று வீட்டிலிருந்து தப்பியோடி சேலம் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலரிடம் தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு புகார் கொடுத்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு அந்த மாணிவியின் தந்தை கதிரவன், சியமளா ஆகியோர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் மகளின் விருப்பப்படி அவரை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பெற்றோர்களும் மனம் திருந்தி திருமணத்தை நிறுத்தி விடுவதாகவும், புவனேஸ்வரியை அவரது விருப்பப்படி தொடர்ந்து படிக்க வைப்பதாக உறுதியளித்தனர். பின்னர் தனது மகளை அழைத்து கொண்டு வீடு திரும்பினர்.
புவனேஸ்வரி திருமணத்தை மறுத்ததை அடுத்து மாப்பிள்ளை பாஸ்கருக்கும், புவனேஸ்வரியின் உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் முடிந்தது.