முதலிடம்-மாணவருக்கு கம்ப்யூட்டர் வழங்கிய ஜெ
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதித்த கன்னியாகுமரி மாணவருக்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கம்ப்யூட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார்.
இது குறித்து அதிமுக தலைமையகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,
பத்தாம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடம்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரம் பேரூராட்சி 14வது வார்டு அதிமுக உறுப்பினர் திருமதி.பி.மார்சிலின் மகன் பி.எம்.ஜோஸ்ரிஜன் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது ஜெயலலிதா அந்த மாணவருக்கு கம்ப்யூட்டர் ஒன்றை பரிசாக வழங்கினார். ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தையும் பரிசாக அளித்தார். மேலும் அந்த மாணவரை பாராட்டினார். தொடர்ந்து சிறப்பாக படிக்க தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவர் மற்றும் அவரது பெற்றோர் ஜெயலலிதாவுக்க நன்றி தெரிவித்து கொண்டனர்.
ஜெ.வை சந்தித்த தென்காசி எம்.பி...
அதிமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி எம்.பி. லிங்கமும் நேற்று மாலை ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லக்கண்ணு, மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் ஆகியோர் உடன் இருந்தனர் என அதில் கூறப்பட்டுள்ளது.