மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம்: கருணாநிதி!
சென்னை: எதிர்க்கட்சி நண்பர்கள் தோல்வியால் சோர்ந்து வீட்டில் இருந்து விட வேண்டாம். தொடர்ந்து திட்டிக் கொண்டே இருங்கள். நீங்கள் திட்டத் திட்டத்தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருப்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகள் உதயாவின் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
ஜனநாயகத்தில் வெற்றி-தோல்வி சகஜம். மக்கள் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு அதை ஏற்க வேண்டும். 1991ல் துறைமுகத்தில் மட்டும் வெற்றி பெற முடிந்ததால் நாங்கள் சோர்ந்து விடவில்லை. நமது சாதனை போதாது என்று மேலும் மேலும் மக்களுக்காக உழைத்து சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறோம்.
எதிர்க்கட்சி நண்பர்களும் தோல்வியால் சோர்ந்து வீட்டில் இருந்து விட வேண்டாம். தொடர்ந்து திட்டிக் கொண்டே இருங்கள். நீங்கள் திட்டத் திட்டத்தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருப்போம்.
எனக்கு உடல் திறன், உடல் வலிமை இல்லை. என்னை ஒரு மூட்டையாக கட்டி வந்ததாக சிலர் கூறினார்கள். அவர்கள் மூட்டைகளாக இருக்கிறார்கள்.
இந்த இயக்கம் திராவிடர் இன உணர்வுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். ஆசிய ஜோதி நேரு, திராவிடர்-ஆரியர் இடையே நடந்த போராட்டத்தைத் தான் ராமாயணம் சொல்லுகிறது என்று கூறி இருக்கிறார். அந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
1967ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் ராஜாஜி கூட்டணி சேர்ந்தார். காமராஜரை எதிர்த்து வெற்றி பெற்றோம். என்றாலும் முதல்வர் பொறுப்பு ஏற்றபோது அண்ணா அவர்கள், காமராஜரின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். அன்று திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்த தந்தை பெரியாரிடமும் வாழ்த்து பெற்றோம்.
இதுபற்றி கருத்து சொன்ன ராஜாஜி, தேன்நிலவு முடிந்து விட்டது என்றார். ஆனால் அண்ணா, தேன்நிலவு முடிந்து குடும்பம் நடக்கிறது என்றார். இது போன்ற அரசியல் பண்பு நிறைந்த தலைவர்கள் காலத்தில் வாழ்ந்தோம் என்பது தான் பெருமை.
1971ம் ஆண்டு தேர்தலின் போது சில பத்திரிகைகள் திமுகவுக்கு எதிராக இருந்தன. ராஜாஜி, காமராஜரை ஆதரித்தார். பெரியார் மீண்டும் நம் பக்கம் வந்தார்.
அந்தத் தேர்தல் உண்மையிலேயே ஆரிய-திராவிடப் போராட்டமாக நடைபெற்று அப்போது நாம் முன்பு இருந்த இடத்தை விட கூடுதலாக 20 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றோம்.
அப்போது நடந்தது போன்று மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போதும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சிந்தனையை தட்டி எழுப்ப என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிப்பாய்கள் இருக்கிறார்கள்.
ஆரிய-திராவிடக் கனல் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் போராட்டத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். மீண்டும் 1971ம் ஆண்டை இந்தத் தமிழகம் சந்தித்தே தீரும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications