ஆஸியில் இந்தியர்கள் மீது தொடரும் தாக்குதல்!!

இந்த நிலையில் இன்று மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்.
நான்கு இந்திய மாணவர்களையும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் கும்பல் ஒன்று மெல்போர்ன் நகரில் வழிமறித்து ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட ஆயுதங்களால் இனவெறியுடன் தாக்கியது. இதில் நான்கு பேரும் காயமடைந்தனர்.
அவர்களில் 25 வடதாகும் ஷ்ராவன் குமார் என்ற மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை மிகவும் அபாயகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா கடும் கண்டனம்..
இந்த இனவெறித் தாக்குதலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஷ்ராவன் குமார் நிலை குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நமது மாணவர்கள் மீது மெல்போர்ன் நகரில் நடந்த இந்தத் தாக்குதல் மிகவும மோசமானது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தனது நாட்டுக்கு வந்து படிக்கும் பிற நாட்டு மாணவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ஆஸ்திரேலிய அரசுக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ஒருவர் மீது தாக்குதல்
இந்தநிலையில் மேலும் ஒரு இந்தியர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்கப்பட்ட மாணவரின் பெயர் பல்ஜீந்தர் சிங். திங்கள்கிழமை ரயில் நிலையம் ஒன்றிலிருந்து வெளியே வந்த அவரை இருவர் கொண்ட கும்பல் வழிமறித்து பணம் கேட்டது.
கத்தியுடன் மறித்த அக்கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக தனது கைப்பையில் பணத்தைத் தேடியுள்ளார் சிங். அப்போது அந்தக் கும்பல் திடீரென சிங்கை கத்தியால் வயிற்றில் குத்தி விட்டது.
பின்னர் அக்கும்பல் ஓடி விட்டதாம். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங் இதுகுறித்துக் கூறுகையி்ல், நான் பணத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது அக்கும்பல் என்னைப் பார்த்து சிரித்தது. பின்னர் கத்தியால் குத்தினர்.
நான் கொல்லாதீர்கள், கொல்லாதீர்கள் எனக் கத்தினேன். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
மெல்போர்ன் நகரம் மிகவும் பாதுகாப்பானதாக நான் முன்பு கருதினேன். ஆனால் இப்போது இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறேன்.
இங்கு தொடர்ந்து இந்தியர்கள் தாக்கி வருகின்றனர் என்றார்.
இந்தியர்களின் வீடுகள் திருட்டு
தொடரும் ஆஸி இனவெறி-தாக்கப்பட்ட இந்தியர்கள்
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் இனவெறியர்களால் தாக்கப்பட்ட இந்தியர்களின் வீடுகளை சில ஆஸ்திரேலிய இளைஞர்கள் சூறையாடி, திருடிய சம்பவம் இந்திய சமூகத்தினரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மெல்போர்ன் நகரில் சமீபத்தில் நான்கு இந்திய மாணவர்கள் (ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்) இனவெறி ஆஸ்திரேலிய இளைஞர்களால் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாக்கப்பட்ட இந்தியர்களின் வீடுகளை ஆஸ்திரேலிய இனவெறியர்கள் தாக்கி, திருடிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த அக்கிரமக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் திருடிச் சென்று விட்டனர். வீட்டில் இருந்த துணியைக் கூட அந்த இனவெறி திருட்டுக் கும்பல் விட்டு வைக்கவில்லையாம்.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க சம்மேளனத்தின் தலைவர் கெளதம் குப்தா கூறுகையில், வீட்டில் இருந்த ஒரு பொருளையும் விடாமல் சூறையாடி, திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் காரணமாக மெல்போர்ன் நகரில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தும், பயந்தும் போயுள்ளனர்.
குறிப்பாக தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பெரும் பீதியில் உள்ளனர். ஏற்கனவே தங்களைத் தாக்கிய கும்பல்தான் இந்த திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்கள் சந்தேகிக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications