சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்-அழகிரி உறுதி

பதவியேற்பு விழா முடிந்தவுடன் நிருபர்களிடம் பேசிய அவர், மிக சகஜமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தினார். இவருக்கு ஆங்கிலம் தெரியுமா, இந்தி தெரியாத நிலையில் டெல்லியில் முக்கியமான அமைச்சரவையை இவரால் நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகங்களுக்கு இதன் மூலம் முற்றுப் புள்ளி வைத்தார் அழகிரி.
மதவாத சக்திகளால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளது.
எனவே அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை தனிப்பட்ட முறையில் நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். மக்களுக்கு தந்த உறுதிமொழியை நிறைவேற்றுவோம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் திமுக அமைச்சர்கள் பாடுபடுவார்கள் என்றார்.
தடுமாற்றம் இல்லாத ஆங்கிலத்தி்ல் அழகிரி நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்ததை அவரது தாயார் தயாளு அம்மாளும் சகோதரரான அமைச்சர் ஸ்டாலினும் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சேது சமுத்திர திட்டத்துக்கு கடந்த 2005ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த பாலு அந்தத் திட்டத்தை வேகவேகமாக நிறைவேற்றிக் கொண்டிருந்த நிலையில் பாஜக, அதிமுகவால் வழக்குகள் தொடரப்பட்டு அந்தத் திட்டம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று மதுரை வரும் அழகிரிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடு்க்க தென் மாவட்ட திமுகவினர் தடபுடல் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications