உடல் நலக்குறைவால் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி - கருணாநிதி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப் பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப் பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல் பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசிய மும் உள்ளது.
எனவே இந்தப் பணிகளை நமது நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச் சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும் தொடர்வதென்றும்,
எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்படுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.