நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்-2 எஸ்ஐகள் சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவி செய்த இரண்டு மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை தாழையுத்து செல்லம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. கல்லிடைக்குறிச்சி டாஸ்மக் பாரில் வேலை செய்து வந்தார். கடந்த 20ம் தேதி ஆலங்குளம் மதுவிலக்கு போலீசார் அந்த பாரில் திடீரென்று சோதனை நடத்தி மாடசாமி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந் நிலையில் நெல்லை மாலைநேர நீதிமன்றத்தில் மாடசாமியை ஆஜர்படுத்துவதற்கு பதிலாக குமார் என்பவரை ஆஜர் செய்தனர். விசாரணையின் போது இதை நீதிபதி கண்டுபிடித்தார்.
இதை தொடர்ந்து கோர்ட்டில் ஆள்மாறாட்டம் செய்ததாக நீதித்துறை உதவியாளர் வைத்தியலிங்கம், பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியப்பனும் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆள்மாறாட்டத்திற்கு ஆலங்குளம் மதுவிலக்கு போலீசார் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கர்க் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மாடசாமிக்கு பதில் குமாரை கோர்ட்டுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஏட்டுகள் பாலமுருகன், தட்சணாமூர்த்தி, மனோகரன், ஆகியோர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் சவரிமுத்து, முத்துசாமி, வெள்ளத்துரை, திருவரன், பரமசிவன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் எப்ஐஆரில் குமாரின் முகவரியும் போலியாக கூறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரெஜினா ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆள் மாறாட்டம் வழக்கில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கல், 3 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும், 5 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications