தமிழர் பிரச்சினையின் அடிப்படைக்குத் தீர்வு காண வேண்டும் - எஸ்.எம்.கிருஷ்ணா

வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணா முதல் வேலையாக இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணா பேசுகையில், தமிழ் இனப் பிரச்சினைக்கு அடிப்படை எது என்பதைக் கண்டறிந்து அதைத் தீர்க்க இலங்கை அரசு தற்போது முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து தர வேண்டும்.
இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இந்திய அரசு கருதுகிறது. இப்போது பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
இலங்கை அரசியல் சாசனத்திற்குட்பட்ட அதிகாரப் பகிர்வை தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் இலங்கை அரசு வழங்க வேண்டும். அதுதொடர்பான அரசியல் நடைமுறைகளை அந்நாட்டு அரசு தொடங்க வேண்டும்.
அனைத்து சமுதாயத்தினரும் சுதந்திரமாக நடமாட நாட்டில் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மறு சீரமைக்கும் பணிகளில் இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா செயல்படும். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவும் என்றார் அவர்.
அதேபோல பாகிஸ்தான் அரசு, தனது மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது. அங்கிருந்தபடி செயல்படும் தீவிரவாத முகாம்களைக் களைய பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications