தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு-கபில்
டெல்லி: தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிற்பட்ட வகுப்பினருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக வரும் எதிர்ப்புகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் மத்திய மனித வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த அர்ஜூன் சிங், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சாதனை படைத்தார்.
இதனாலேயே அவரை வில்லனாக சித்தரித்து வருகி்ன்றன வட இந்திய மீடியாக்கள். அவர்களது எதிர்ப்பால் அவருக்கு இம்முறை அமைச்சர் பதவியே தராமல் ஒதுக்கிவிட்டது காங்கிரஸ் தலைமை.
இந்தத் துறைக்கு கபில் சிபல் அமைச்சராக நியமிக்கப்பட்டதும், அவர் மனித வளத்துறையையே மாற்றி அமைக்கப் போவதாகவும் அர்ஜூன் சிங் கொண்டு வந்த சில திட்டங்களை புரட்டிப் போடப் போவதாகவும் இந்த மீடியாக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டன.
இந் நிலையில் அமைச்சராக பொறுப்பேற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு படிப்படியாக அமலாக்கப்பட்டு வருகிறது. இதை தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
இது குறித்து பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக எதிர்ப்புகள் வரத் தான் செய்யும். ஆனால், அதை சந்திக்க நான் தயார் என்று கூறி இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு மீடியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications