பிஇ அரசு ஒதுக்கீடு சீட்கள்-விண்ணபிக்க நாளையே கடைசி தினம்
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சீட்களில் சேர, விண்ணப்பங்களை சமர்பிக்க நாளையே கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு, மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 85,000 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கட்-ஆப் மார்க் மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 6ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் வினியோகம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க நாளையே கடைசி நாளாகும். நேரிலும், தபால் மற்றும் கூரியர் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இந் நிலையில் நேற்று வரை 1,57,800 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், விண்ணப்பங்கள் நாளை மாலை 5.30 மணி வரை பெறப்படும். 20,000 பேர் நேரிடையாக வந்து விண்ணப்பித்துள்ளனர். 55,000 பேர் தபால் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் வாங்கிய அனைவரும் விண்ணப்பிப்பார்கள் என்று கூற முடியாது என்றார்.
இதற்கிடையே விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று மாணவ-மாணவிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 15 கெளண்டர்களிலும் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.
ஜூலை 6 முதல் மருத்துவ கவுன்சிலிங்...
இதற்கிடையே ஜூலை 6ம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் ஜூலை 6ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரை நடைபெறும் என நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார்.
ஜூன் 6ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் பெறுவதற்கும் சமர்ப்பிப்பதற்கும் கடைசி நாள் ஜூன் 17ம் தேதியாகும்.
2ம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறும்.
கல்லூரியில் சேர்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 9ம் தேதியாகும் என்றார்.