உயிர் உள்ளவரை புலிகளுக்கு குரல் தருவேன்-வைகோ
சென்னை: என் உயிர் உள்ளவரை புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியா தோற்கடித்துள்ளது. இந்த நேரத்தில், கருணாநிதியின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஐ.நா. சபையில் தமிழர்களுக்கு எதிராக சோனியா காந்தி செய்த துரோகத்தை தடுக்க கருணாநிதி தவறிவிட்டார். நான் என் உயிர் உள்ளவரை புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்.
படைப்பாளிகள் எல்லைகளைக் கடந்தவர்கள். பாரதிராஜாவின் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் வைகோ.
இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், பாமக கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.