அரைவேக்காடு வட இந்திய மீடியா-குமுதம் விளாசல்
சென்னை: ஈழப் பிரச்சினையில், வட இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் அரை வேக்காட்டுத்தனமாக நடந்து கொண்டது எரிச்சல்படுத்துகிறது. இவர்கள் எல்லாம் ராஜபக்சே நாட்டில் போய் தமிழர்களாகப் பிறந்தால்தான் அந்தத் தமிழர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடியும் என குமுதம் இதழ் கடுமையாக சாடியுள்ளது.
ஈழப் பிரச்சினையில் வட இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில மீடியாக்களின் அரைகுறை, அவசர கோல செய்திகள், கருத்துக்கள் தமிழக மக்களிடம் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகின. இதை குமுதம் தனது அரசு கேள்வி-பதிலில் பிரதிபலித்துள்ளது.
அரசு கேள்வி பதில் பகுதியில் இடம் பெற்ற அந்த கேள்வியும், குமுதம் அளித்த பதிலும்..
சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?
ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சேவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது.
ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.
சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள்.
உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.
இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் சேனல் ஆசிரியர்கள், நிருபர்கள், நிருபிகள்... இவர்கள் ராஜபக்சே நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும் என்று சாடியுள்ளது குமுதம்.












Click it and Unblock the Notifications