ஆள் இல்லா கேட்-லாரி மீது ரயில் மோதல்!
கரூர்: கரூர் அருகே ஆள் இல்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மண் லாரி பழுதாகி தண்டவாளத்தில் நின்றது. அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில், லாரி மீது பயங்கராமாக மோதியது.
கரூர் சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மண் ஏற்றி் வர ஒரு டிப்பர் லாரி ஏமூர் சீத்தப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தது.
அதை டிரைவர் மாணிக்கம் (48) ஓட்டிச் சென்றார். ஏமூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை லாரி கடக்க முயன்றபோது, தண்டவாளத்தின் குறுக்கே பழுதாகி நின்றுவிட்டது.
அப்போது, நாகர்கோவிலிருந்து கோவை செல்லும் பயணிகள் ரயில் அங்கு வந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் மாணிக்கம், லாரியிலிருந்து இறங்கி ஓடிவிட்டார்.
அடுத்த சில வினாடிகளில் லாரி மீது ரயில் மோதியது. இதில் பல மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட லாரி அப்பளமாக நொறுங்கிவிட்டது. ஆனால், ரயிலுக்கு் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மீட்புப் பணிகளுக்குப் பின்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. தப்பியோடிய லாரி டிரைவர் மாணிக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் பல குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.