சுஷ்மா சுவராஜுக்கு துணை சபாநாயகர் பதவி? - அத்வானியுடன் மன்மோகன் ஆலோசனை
டெல்லி: பாஜகவுக்கு துணை சபாநாயகர் பதவி தருவது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
சுஷ்மா சுவராஜ் துணை சபாநாயகர் பதவியில் அமர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
நேற்று மாலை அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர், அவரிடம், பாஜகவுக்கு துணை சபாநாயகர் பதவியை தருவதாக தெரிவித்தார். மேலும், இப்பதவிக்கான வேட்பாளர் குறித்தும் அவர் அத்வானியுடன் ஆலோசனை நடத்தினார்.
மரபுப்படி துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கே தரப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது பாஜகவுக்கு இப்பதவியைத் தர காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
2004ம் ஆண்டும் பாஜகவுக்கு துணை சபாநாயகர் பதவியைத் தர காங்கிரஸ் முன்வந்தது. ஆனால் அதை ஏற்காத பாஜக, அதற்குப் பதிலாக தனது கூட்டணிக் கட்சியான அகாலிதளத்திற்கு இப்பொறுப்பை தருமாறு கேட்டுக் கொண்டது. அதன்படி அகாலிதளத்தின் சரஞ்சித் சிங் அத்வால் துணை சபாநாயகரானார்.
இருப்பினும் இம்முறை துணை சபாநாயகர் பதவியை பாஜக ஏற்கும் எனத் தெரிகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் துணை சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், சுமித்ரா மகாஜனின் பெயரும் துணை சபாநாயகர் பதவிக்கு அடிபடுகிறது.