சூறாவளி-தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் வாழைகள் நாசம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து நாசமாகின.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திய போதிலும் சில நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக வெயில் மீண்டும் வறுத்தெடுக்கிறது.
அதே நேரத்தில் பலத்த சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இந்த சூறாவளி காற்றுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 லட்சம் வாழை மரங்கள் நாசமாகி, விவசாயிகளுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே சாமிநத்தம் ராஜகோவில் பகுதியில் திடீரென சூறைகாற்று வீசியது. இதில் ஜெயமுருகன், அக்சு நாயக்கர், செல்வராஜ் உள்பட பலரது வாழை தோட்டம் முற்றிலும் சரிந்து நாசமாகிவிட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.