சாமி கும்பிடுவதில் தகராறு - மூன்று தலித்கள் வெட்டிக் கொலை
தென்காசி: தென்காசி அருகே சாமி கும்பிடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள கீழ ஆம்பூரை பகுதியில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே அடிக்காடி தகராறு எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுடலை (42) என்பவர் நேற்று மாலையில் தனது தோப்பில், மலையன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசன் (20), அவரது உறவினர் முத்துகுமார் (22) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று தலித் சமுதாயத்தை சேர்ந்த சுடலையை ஓட ஓட விரட்டி அரிவாளால் சராமரியாக வெட்டியது. இதை பார்த்த கணேசன் மற்றும் முத்துகுமார், சுடலையை காப்பாற்ற முயன்றனர். இதையடு்த்து அந்த கும்பல் அவர்களையும் அரிவாளால் வெட்டியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சுடலை அம்பாசமுத்திரம் மருத்துவமனையி்ல சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பின்னர் சிறிது நேரத்தில் இறந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமார் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து நெல்லை டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஆஸ்ரா கர்க், அம்பை டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஆம்பூர் பெரிய தெரு மஞ்சபுளி காலனியை சேர்ந்த பொதுமக்கள் கணேசனின் உடலை எடுக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த கீழ ஆம்பூர், மலையன்குளம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து எஸ்பி ஆஸ்ரா கார்க் கூறுகையில்,
குற்றவாளிகளை தேடி வருகிறோம். இப்பகுதியில் கோவில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே கருத்து மோதல் இருந்து வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் எதிர்ப்பு தரப்பினர் தந்த புகாரின் காரணமாக கைது செய்யப்பட்ட சிறையில் இருந்தவர்கள். அவர்கள் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்துள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications