மிஸிஸிபியில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடுமை
மிஸிஸிபியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முரளி கிருஷ்ணா, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெற்கு மிஸிஸிபி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
தனது வருவாய்க்காக ஒரு பெட்ரோல் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். 17ம் தேதி இரவு கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்தார்.
ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல் காருக்குச் சென்றார். இதையடுத்து முரளி கிருஷ்ணா, அவரிடம் போய் காசு கேட்டார். ஆனால் கோபமடைந்த அந்த கருப்பர், முரளி கிருஷ்ணாவை தாக்கினார். பின்னர் கோபத்துடன் கார்க் கதவை மூடிய அவர் வேகமாக கிளம்பினார்.
அப்போது முரளி கிருஷ்ணாவின் மேல் கோட், கார்க் கதவில் சிக்கிக் கொண்டது. படுவேகமாக சென்ற காரில் சிக்கிக் கொண்டு இழுத்துச் செல்லப்பட்டார் முரளி கிருஷ்ணா.
சுமார் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரவு ரோந்துப் போலீஸார் அங்கு விரைந்து வந்து காரை நிறுத்தி முரளியை மீட்டனர்.
படுகாயமடைந்த முரளி கிருஷ்ணா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக முரளியின் தாயார் அமெரிக்கா விரைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது சரமாரியாக இனவெறித் தாக்குதல் நடந்து வரும் நிலையில், இப்போது அமெரிக்காவில் இந்திய மாணவர், தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.