தமிழக போலீஸ்-ராணுவ அதிகாரி பாராட்டு
சென்னை: நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் உள்ளூர் போலீஸார்தான். அவர்களுடைய சிறப்பான பணியால்தான் தமிழகத்தில் மட்டும் தீவிரவாதிகள் நடமாட முடியாத நிலை உள்ளதாக தென் பிராந்திய ராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஈப்பன் ஜேக்கப் கோச்சகன் பாராட்டியுள்ளார்.
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியின் ராணுவ தலைமை அதிகாரியாக பணியாற்றிய கோச்சகன் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் போலீஸார் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாகவே இங்கு மட்டும் தீவிரவாதம் தலை தூக்க முடியவில்லை. தீவிரவாதிகளால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
நாடு முழுவதும் எத்தனையோ தீவிரவாத தாக்குதல்கள் நடந்தபோதிலும், தமிழகத்தில் மட்டும் தீவிரவாதிகளால் வாலாட்ட முடியாமல் இருப்பதற்கு தமிழக காவல்துறையினர் செயல்பட்டு வரும் விதம்தான் காரணம்.
மிகுந்த விழிப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் தமிழக காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கூட அவர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும் பொதுமக்கள் அவர்களைப் பார்த்து நட்புடன் ஒரு புன்னகை பூக்க முன் வர வேண்டும். அவர்கள் நமக்காகத்தான் இப்படி கடுமையான சூழ்நிலையிலும் கூட முகம் சுளிக்காமல் பணியாற்றுகின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும். அதுதான் நாம் காவல்துறையினருக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்.
இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு குறித்து சிறப்பு எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. இருப்பினும் ராணுவம் எப்போதும் உஷார் நிலையில்தான் உள்ளது. பல்வேறு உளவு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு ராணுவம் பணியாற்றி வருகிறது.
நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒவ்வொரு குடிமகனும் தீவிரமாக இருக்க வேண்டும். சீருடைப் பணியாளர்ளால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது என்பது சாத்தியமற்ற காரியம். எனவே பொதுமக்களே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். யாராவது சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் அவர்கள் குறித்து போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் கோச்சகன்.